Friday 14 February 2014

பாட்டி சுட்ட வடையை காக்கா சுட்டது சரியா? தவறா ? விவாத மேடை !

- 4 comments
வணக்கம் நண்பர்களே !
      எனது கற்பனையில் உதித்த மற்றுமொரு படைப்பு ! இந்த படைப்புக்கு தூண்டுதல் இமயம் தொலைகாட்சியில் வரும் காமெடி பஜார் ! அவர்களுக்கு எனது நன்றிகள் ! சரி ! என்ன படைப்பு ? நாம் தினந்தோறும் செய்தி சேனல்களில் காணும் விவாத மேடையே !அதை நமது பழங்கதையுடன் இணைத்துள்ளேன் ! பிடித்திருந்தால் கருத்துரைக்கவும் !
                                                            


நிருபர் :வணக்கம் நேயர்களே  ! இது   எதிர்பட பேசு ! விவாதமேடை ! இன்றைய விவாத மேடையின் தலைப்பு , இன்று காலை கடற்கரை அருகே ஒரு பாட்டி வடை சுட்டுகொண்டிருக்கும் போது  அடையாளம் தெரியாத ஒரு காக்கை அவர் சுட்டு கொண்டிருந்த வடையை சுட்டு  கொண்டு போய் விட்டது ! இதை பற்றி விவாதிக்க நமது அரங்கிற்கு வந்துள்ள  எதிர்கட்சியை சேர்ந்த திரு W,ஆளுங்கட்சியை சேர்ந்த திரு X , மற்றும் சமூக ஆர்வலர் திரு Y, மற்றும் ப்ளூ க்ராஸ்அமைப்பை சேர்ந்த Z  வந்திருக்கின்றனர். அவர்களுக்கு நிலையத்தின் சார்பில் வணக்கத்தை தெரிவித்து கொண்டு விவாதத்தை தொடங்கலாம் ! முதலில் எதிர்கட்சியை சேர்ந்த W ! சொல்லுங்க இந்த நிகழ்வ நீங்க எப்படி பார்க்குறீங்க !

W  :அதாவது இந்த நிகழ்வை பார்த்தோமேயானால் தமிழகத்தில் உள்ள சட்டம் மற்றும் ஒழுங்கின் நிலைமையை காண்பிக்கிறது ! அந்த பாட்டிக்கு உளுந்து மற்றும் அரிசி கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட இலவச  விநியோக திட்டத்தில்  கொடுக்கப்பட்டது ! அதன் மூலம் அவர் சுயமாக சம்பாத்தித்து வந்துள்ளார் . இன்று அதற்க்கு முட்டு கட்டை போடும் விதமாக திருடர்கள் நகரத்தில் பெருகி விட்டார்கள் என்பதை இது காட்டுகிறது.

நிருபர்: திரு X  இதற்கு உங்கள் பதில் என்ன ?

X  : நண்பர் W  சொன்னார் உளுந்து மற்றும் அரிசி அவர்கள் ஆட்சியில் கொடுத்தது என்று ! அதை மட்டும் கொடுத்துவிட்டால் தீர்ந்து  விடாது பிரச்சினை ! அவர்களுக்கு எங்களது ஆட்சியிலே தான் வடைக்கு மாவரைக்க இலவச கிரைண்டர் , மிக்ஸ்சி கொடுக்கப்பட்டுள்ளது என்று கூற கடமைபட்டுள்ளேன் .

நிருபர் : இல்லங்க சட்டம் ஒழுங்க பத்தி என்ன சொல்ல வரீங்க ?


X  : தற்போதய நிலவரப்படி அந்த காக்கையை பிடிக்க ஏழு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது ! மேலும் கலங்கரை விளக்கம் அருகே ஒருவர் அந்த காக்கையை பார்த்துள்ளார் ! அவர்  கொடுத்த அடையாளங்களுடன் கணினி உதவியோடு அதன் உருவத்தை வரைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது . அடுத்தபடியாக காக்கையின் கால் தடம் வடை வைத்திருந்த தட்டிலே உள்ளது . அதை தடயவியல் ஆய்வாளர்கள் சோதனை செய்து கொண்டிருக்கிறார்கள் . இதை எல்லாம் நான் எதற்கு சொல்கிறேன் என்றால் . இவ்வளவு நடவடிக்கை எடுத்தபின்பும் எதிர் கட்சியினர் குறை கூறுகிறார்கள் என்றால் , அது காழ்ப்புணர்ச்சியே அன்றி அந்த பாட்டியின்  மீது உள்ள  அனுதாபத்தில் அல்ல!


நிருபர் : நீங்க சொல்லுங்க சார்! மனித ஆர்வலராக நீங்க எப்படி பார்க்குறீங்க ?

Y : இது ஒரு தனி மனிதனுக்கு ஏற்ப்பட்ட வாழ்வாதார பிரச்சினயாகத்தான் பாக்கறேன் . ஏன்னா ? அந்த பாட்டி சுட்டது ஒரு வடை !அந்த வடையும் ஒரு காக்கா  தூக்கி கிட்டு போச்சுனா அந்த பாட்டி என்ன செய்வாங்க பாவம் ! இந்த ஜனநாயகத்திலே தொழில் செய்யும் உரிமையை அதன் சங்கை நெரிப்பது போல் உள்ளது!  இது முழுக்க முழுக்க மனித உரிமை மீறல் மட்டுமே ! ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இப்படி சண்டை போடுறத விட்டுட்டு அந்த பாட்டிக்கு தேவையான உதவிகள் செய்யணும் !

ஆளுங்கட்சி Y : உதவிகள் செய்யாம இல்லைங்க சார் ! இப்ப கூட அந்த அம்மாவுக்கு முதல்வர் நிவாரண நிதியில்  இருந்து 5000 கொடுக்கப்பட்டிருக்கு! சும்மா தெரியாம பேசக்கூடாது !

நிருபர்:  திரு .Z  இந்த சம்பவம் பத்தி நீங்க என்ன சொல்ல வரீங்க ?

 Z : இது கண்டிக்கப்பட வேண்டிய செய்தியே அல்ல ! அந்த காக்கை திருடியது சாதாரண வடை !
 
X : சாதாரண வடை என்று திருட்டை நியாயபடுத்தாதீர்கள் !அந்த காக்கை சட்டத்தின் முன் நிறுத்த படவேண்டும் !
 
Z :அப்படி என்றால் , உங்கள் ஆட்சியை சேர்ந்தவர்களும் , கடந்த ஆட்சியை சேர்ந்தவர்களையும் தான் சட்டத்தின் முன் நிறுத்தத் வேண்டும் !

நிருபர் : எப்படி சொல்றீங்க ?

Z : ஆமாங்க !திருடுவதற்கு காரணமானவர்கள்  யார் ? தற்போது ஆட்சி செய்துகொண்டிருக்கின்ற , கடந்த முறை ஆட்சி செய்த மத்திய மாநில அரசுகள் தான்!
 
நிருபர் : புரியவில்லை ? 

Z : இன்றைக்கு இருக்கின்ற விலைவாசி ஏற்றத்திலே  யாருமே காக்கைக்கு சோறு வைப்பதே இல்லை, அப்புறம் அந்த காக்கா  எங்க போய்  சாப்பிடும் சொல்லுங்க!  நான் மக்களை குறை சொல்ல வில்லை ! விலை வாசி ஏற்றத்துக்கு காரனமனவர்களைத்தான் குறை  சொல்கிறேன் ! அதனால இது முழுக்க முழுக்க ஆட்சி செய்து கொண்டிருக்கிற மற்றும் ஆண்ட  மத்திய மாநில  அரசுகளையே சாரும்! 

ஒரு சிறிய இடைவெளிக்கு பின்னர் மீண்டும்  இணைவோம் ! எதிர் பட பேசு !

--------------------------------------------------------------------------------  


 நண்பர்களே ! இடைவேளை  நிகழ்ச்சிக்கு மட்டும் இல்ல ! இந்த பதிவுக்கும் தான் !  அடுத்த பகுதிக்கு கொஞ்சம் காத்திருக்கவும் !

பிடித்திருந்தால் வாக்களித்து  கருத்துரைக்கவும் !

நன்றியுடன் !

இரா.மாடசாமி

 
[மேலும் படிக்க>>>]
 
Copyright © . வானவில் - Posts · Comments
Theme Template by BTDesigner · Powered by Blogger